‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா. புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், முள் காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.
படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தைப்பற்றி இயக்குனர் கூறுகையில்,
“நாம பேசுற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கூறும் படமிது.
அதேநேரம் இதனை வெறும் கருத்து கூறும் படமாக மட்டுமில்லால் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறோம்.
இக்கதை நடைபெறும் இடங்கள், இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திடாத இடங்கள். ஆதலால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் கன்டிப்பாக சர்ப்ரைஸ் ஆவார்கள்.
மேலும், இது பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும்படி காட்சிக்கு காட்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருக்கும். மே மாதம் திரைக்கு வருகிறோம்.” என்றார்.